Friday 6 December 2013

சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ‘மா மனிதன்’ மண்டேலா ! வானளாவி நிற்கட்டும் அவரின் புகழ் !



        சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ‘மா மனிதன்’ மண்டேலா !
                வானளாவி நிற்கட்டும் அவரின் புகழ் !
                               ~~~~~~~~~~~~~~~

குடும்பமும் இயற்பெயரும் -

    
1918
ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள, தற்போது ஈஸ்டர்ன்கேப் மாகாணத்தில் அமைந்துள்ள ட்ரான்ஸ்கே நகர், வெஸொ(Mvezo) எனும் இடத்தில் மடிபா பழங்குடி இனத் தலைவரின் மகனாகப் பிறந்த திரு.நெல்சன் மண்டேலாவின்  இயர்ப்பெயர்ரோலிஹ்லஹ்லா மண்டேலா’ (Rolihlahla Mandela)என்பதாகும்.
     குணு (Qunu) எனும் இடத்தில் உள்ள பள்ளியில் அவரைச் சேர்த்த போது, பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் "கிரிஸ்துவப் பெயர்’’ கொடுக்கப் படவேண்டும் என்ற அந்நாட்டினது சம்பிரதாயத்திற்கு ஏற்ப மண்டேலாவின் ஆசிரியை அவருக்கு ‘நெல்சன்’ என்ற பெயரைச் சூட்டினார். அன்று முதல் அவர் ‘நெல்சன் மண்டேலா’ என்றே அறியப்படுகின்றார்.
கல்வி-
   ‘ஃபோர்ட் ஹரே’ பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்றபோது மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடரக் கல்லூரியால் தடை விதிக்கப்பட்ட மண்டேலா
  பின்னர் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழத்தில் சேர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார்.

       பின்னர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு சுரங்கத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.
   விட்வாட்டர்ஸ்ரண்ட் பல்கலைக்கழகத்தில் (University of Witwatersrand) சட்டம் பயில சேர்ந்து இடையிலேயே 1948ல் வெளியேறினார்.
    பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தில் அதைத் தொடர முயன்றும் அப்பட்டப் படிப்பை முடிக்க இயலவில்லை அவரால்.
    பிற்காலத்தில், தனது சிறைச் சாலை வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் 1989ல் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழத்தின் வாயிலாகப் படித்து எல்.எல்.பி. (சட்டக் கல்வி) பட்டம் பெற்றார்.
உரிமைப் போராட்டமும் அரசியலும்-
   அக்காலத்தில், பூர்வகுடிக் கறுப்பு நிற மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற தென்னாபிரிக்க நாட்டினை, வந்தேறி சிறுபான்மையினரான, நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
    வெள்ளையரின் நிறவெறி, அடக்கியாளும், எதேச்சாதிகாரத் தன்மையை எதிர்த்து தனது 21 வது வயதிலேயேப் போர்கொடி உயர்த்தியவர் திரு.நெல்சன் மண்டேலா.
         வந்தேறிகளான, அடக்குமுறையாளர்களான, இனவாத வெள்ளையருக்கு அடிபணிந்து வாழ்வதால் ஒருபோதும் மாற்றம் வந்துவிடாது என்பதையும், அவர்களின் எதேச்சையதிகாரத்துக்கு அடிபணியாது துணிவுடன் எதிர்த்து நின்று போராடுவதன் மூலமும் தான் தென்னாப்பிரிக்க கறுப்பு நிற மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதையும் அந்நாட்டு மக்கள் உணரச் செய்தார் திரு.மண்டேலா.

    1942ம் ஆண்டுமுதல் அரசியலில்  ஈடுபட்ட அவர் 1948ல் இளைஞர் அமைப்பை ஏற்படுத்தியதன் மூலம் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணத்துக்கொண்டு அரசியலில் தீவீரமாக செயல்பட ஆரம்பித்தார்.
         கி.பி.1948ல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த வெள்ளை இனவாத அரசாங்கம் கறுப்பு நிற மக்களுக்கெதிராக முன்பிருந்த அரசாங்கங்களை விட அதிக அளவுக்கு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.  
         இனவாதஅரசாங்கத்தின் நிறவெறியும் ஒடுக்குமுறையும் எல்லைமீறிச் செல்வதை கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா முழுநேர அரசியலில் ஈடுபட்டு அதன் விளைவாய் கறுப்பு நிற மக்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவானஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
     அதுநாள் வரையில் மிதவாத நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசைத் தான் தலைமையேற்றதும் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்து அறவழி போராட்டங்களை நடத்தும் போராட்ட அமைப்பாக மாற்றினார் நெல்சன் மண்டேலா.

        
அவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவதையும் கண்ட வெள்ளைய நிறவெறி அரசாங்கம் 1956ல், அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த குற்றத்தைக் காரணம் காட்டி திரு.நெல்சன் மண்டேலாவையும் 150 க்கும் மேற்பட்டப் போராட்டக்கார்களையும் கைது செய்தது.

    வழக்கு நடந்துகொண்டிருந்த போது 14-6-1958ல் மண்டேலா வின்னி என்பவரை மணந்தார்.
         அரசுக்கு எதிராகப் புரட்சியினை எதிர்த்த வழக்கினில் ஆறாண்டு காலமாக நடத்திய சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் உலக நாடுகள் தந்த அழுத்தங்களுக்குப் பிறகு 1961ல் திரு. மண்டேலா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
      சிறையிலிருந்து விடுதலையான மண்டேலாவின் செயல்பாடனது முன்பைவிட தீவிரமானது. இதன் காரணமாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிவேகமாக  வளர்ச்சியடைந்தது.
      தென்னாப்பிரிக்காவில் கறுப்பு நிற மக்களுக்கு தனியான நுழைவுச்சீட்டு வழங்குவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் நிராயுதபாணியான மக்கள் மீது இனவறி அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
    இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி நாடெங்கும் அவசரநிலை பிரகடணப் படுத்தக் காரணமாயிற்று. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.
      நெல்சன் மண்டேலா தலைமறைவாய் இருந்துகொண்டு இனவறி அரசுக்கெதிராக ஆயதம் தாங்கியப் போரட்டத்தை நடத்தத் தொடங்கினார். இவ்வாயுதப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி ஆப்ரிக்கக் கண்டத்திலுள்ள பிற நாடுகள், இங்ங்கிலாந்து உட்பட்ட நாடுகளுக்கு இரகசியப் பயணங்களை மேற்கொண்டார்.
சிறை வாழ்க்கை-
   மொராக்கோ மற்றும் எத்தியோப்பியாவில் ஆயுதப்பயிற்சி பெற்றபின் நாடு திரும்பிய மண்டேலாவை அவருடைய சகாக்களுடன் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி காவல்துறை கைது செய்தது.    
    உரிய ஆவணங்கள் இல்லாது வெளிநாடு சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
   மேலும், தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டுக்காக அவர் மீதும்  அவருடைய சகாக்கள் ஏழு பேர் மீதும் நடந்த மற்றொரு வழக்கில் 1964ம் ஆண்டு ஜுன் மாதம் 11ந் தேதி  46 வயதான மண்டேலாவுக்கும் அவருடைய சகாக்கள் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
      1968ல் அவரது தாயார் இறந்தபோதும், பின்னர், 1969ல் அவரது மூத்த மகன் இறந்த போதும் அவர்களது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள மண்டேலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
   பல ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தப்பட்டார்.
     1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட, மரணத்தின் எல்லைக்கே சென்றதால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
   மண்டேலாவை
கைது செய்ததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டம் ஒய்ந்துவிடவில்லை.
  அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது.
   ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தது.
    மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி உலகெங்கும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
விடுதலைக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்-

      1973 இல் டிரான்ஸ்காய் மாநிலத்தில் மட்டும் மண்டேலா வசிப்பதாக இருந்தால் விடுதலை செய்ய வெள்ளை அரசு முன் வந்தது.
     அதனை நிராகரித்த மண்டேலாதமது கறுப்பர் இன மக்கள் முழு விடுதலை கிடைக்கும் வரை எனக்கு விடுதலை தேவையில்லைஎன முழங்கினார்.

    
மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. அதனையும் நிராகரித்து மன்னிப்புக் கேட்க மறுத்தார் மண்டேலா.

விடுதலை-

   தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவிக்கு வந்தபின் புதிய அரசு மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தது.
   அவ்வாறே 11.2.1990 ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கியும், மண்டேலாவை விடுதலை செய்தும் அதிகாரப் பூர்வமாய் உத்தரவிடப்பட்டது. அன்று மாலையே 71 வயதான மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

       
பிரசித்தி பெற்ற இந்நிகழ்வு உலகத் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது!
   27 ஆண்டுகள் சிறைவாசம்!
        உலக வரலாற்றில் மண்டேலாவைப் போன்று இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடியத் தலைவர்கள் எவரும் இல்லை.
விருதுகள்-
    மண்டேலாவிற்கு உலக அமைதிக்கான நோபல் பரிசும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவிருதும்நேரு சமாதான விருதும்மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டது.
          மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக .நா அறிவித்துள்ளது.
பெருமைக்குரியவர்-
     ஒரு பழங்குடி இனத் தலைவருக்கு மகனாகப் பிறந்த நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் ஒளிமயமான பாதைக்குக் கொண்டு சென்ற மகத்தான தலைவர் ஆவார்.
    தென்னாப்ரிக்கா, ஆப்ரிக்காக் கண்டம் மட்டுமல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக விளங்கியவர்  திரு. நெல்சன் மண்டேலா.

வாழ்வும், மறைவும், புகழும்-
     தன் மக்களை ஒளிமயமான பாதைக்குக் கொண்டு சென்ற
அவரது வாழ்க்கையில் இருண்ட நாளானது இன்றய நாள், 6-12-2013 இன்றய நாளில், இந்திய நேரப்படி (தென்னாப்பிரிக்க நேரப்படி டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை இரவு 8.50க்கு ) காலை 7 மணிநளவில் உடல் நலக் குறைவு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் தமது இல்லத்தில் காலமானார் 95 வயதான திரு. நெல்சன் மண்டேலா.
   ஜனநாயகம், சமத்துவம், கற்றல் ஆகியவற்றிலிருந்து தனது வாழ்நாள் முழுமைக்கும் அவர் விலகியதே இல்லை.

    இன வெறியாளர்களால் மோசமானத் தூண்டுதல்கள் ஏற்படுத்தப் பட்டபோதும், மண்டேலா, இனவெறிக்கு பதிலாய் இனவெறியை முந்நிறுத்தியதே இல்லை.

   உலகில் அடக்குமுறையை எதிர்க்கும், உரிமைகள் மறுக்கப்படும், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்கள் யாவருக்கும்     அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாய் இருந்து வருகிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது.
   சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ‘மா மனிதன்’ மண்டேலா !
   வானளாவி நிற்கட்டும் அவரின் புகழ் !