Monday, 31 December 2012

வாக்களிப்பது கடமை

வாக்களிப்பது கடமை

      
தேர்தல் காலங்களில் வாக்குகளைச் சேகரிக்கும் விதமாக,         வாக்குகளைக் குறிவைத்துதனிப்பட்ட அரசியல் கட்சிகள், அல்லது அரசியல் கட்சிசார்ந்த நண்பர்கள் தருவன எதையும் நான் என்றுமே ஏற்பதில்லை. வாங்கிக்கொள்ளும்படி என்னை எவரும் கட்டாயப்படுத்தினால்தேர்தலில் வாக்களிக்காது போவேன்என்றே அச்சுறுத்துவேன்.

    
வாக்களிப்பது என்பது மக்களாட்சியில், இந்தியக் குடிமகனாகிய எனது அடிப்படைக் கடமை. என் கடமையை விலைபேசுவது என்னையே விற்கமுற்படுவதாகும் என்றே நான் கருதுகின்றேன், சுயமரியாதை இழந்தபின் வாழ்வேது!

   
குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைக்கான, அரிதாய் கிடைக்கும், உணவுப்பொருள்களைத் தவிர்த்த அரசு தரும் பிற இலவசங்களை நான் பெறுவதில்லை, புயல், மழை, வெள்ளம்,வறட்சி போன்ற காலங்களின் அரசு நிவாரணங்கள் (ரொக்கத்தொகை) உட்பட. அவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் வசதியும் எனக்கிருக்கின்றது என்பதால், இல்லாதோருக்குக் கொடுங்கள் என்று!

      இயல்பான நிலையில், இலவசங்கள் அற்றுப்போக, மக்களிடம் சுயமரியாதை உணர்வு தோன்ற வேண்டும். சுய மரியாதையைப் பேணும்போது மக்கள் நினைப்பது என்றும் கைகூடும்!

                                                      ~~~~~~~~~****~~~~~~~~~~

இளைப்பாற்றும் படிக்கட்டு.

இளைப்பாற்றும் படிக்கட்டு.
  
   நண்பர்களோடு அலவலாவுவதே ஒரு அலாதி..அதுவும் பழங்கதைகளைப் பேசும்போது ஒரு தனி சுகம்!

      முன்னேறிச்செல்லும்  வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகள் இவற்றிலிருந்து நம்மை நீண்ட தூரம் இட்டுச்சென்றுவிடுகிறது...அவ்வப்போது ஏதோ ஒரு படியில் உட்கார்ந்து இளைப்பாறும்போது, கடந்து வந்த படிகளை மனதில் எண்ணி அசைபோடுவது என்பது சில்லென்ற ஒரு சுகம் தரும்!

            இவ்வித அனுபவம் நண்பர்கள் அனேகருக்கு இருந்திருக்கும்.... இருந்தாலும்  சொல்லத்தெரியாது..  ஒருவர் சொல்லும்போது அதை அனுபவிக்கும் பலரில் நானும் ஒருவன்….

          …இப்படி என் வாழ்வில் ஒரு முறை ...ஹாஸ்டல் வாழ்க்கையில்...

    ..காலையில் மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் நானும் நண்பர் மயில்வாகனன் (தற்சமயம் எங்கிருக்கின்றார் எனத்தெரியவில்லை..சென்னையில்?) மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.

      இறுதி ஆண்டின் கடைசீ செமஸ்டர் என்ற மனதைரியத்தில் வகுப்புக்கு செல்லாமல் பேச ஆரம்பித்தோம். கடைசீயாய் சாப்பிட்ட எதிர் wing  நண்பர் அருண் (தற்போது ஹோசுரில் இருப்பதாய் நினைவு)  "ஹாய்..என்னங்கப்பா..க்ளாஸ் கட்டா" ன்னு கேலியாய் கேட்டுவிட்டு போனவருக்கு ஆமாம் என்று சொல்லிவிட்டு வகுப்புத் தோழனின் காதல் தோல்வி பற்றிப் பேச ஆரம்பித்து….ஆசிரியர்களின் டம்பம் பற்றி பேசி...ஆங்கிலம் வராததால் அவஸ்தைப்படும் நண்பன் ஆறுமுகம் வரை (இவர் பின்னர் டுட்டோரியல் காலேஜ்ஜில் வகுப்பு எடுத்ததாய் கேள்வி) பேசியபோது மதிய உணவுவேளை வந்தது..

     
போய் சாப்பிட்டுவிட்டு வந்து....மீண்டும் பேச்சு....எடுக்கத்தெரியாமல் எடுத்து சாகடிக்கும் திரை இயக்குனர்களின்  திறமையை அலசியபோது.."என்னப்பா.. சாப்ட்டாவது வந்து பேசுங்களேன்.." என்ற அருணுக்கு "எப்பியோ சாப்டாச்சுன்னு" சொல்லிட்டு, கரடி, ஆடு, மாடு, பாம்பு இதெல்லாம் வச்சு படமெடுக்கறதைப் பேசி.....நகைச்சுவையின் நயம் பேசி..நாயகிகளின் நடிப்பு பேசி....நான் எடுத்தால் எப்படி எடுப்பேன், அதில் வசனகர்த்தா கண்டிப்பா நம்ம ஆறுமுகம் தான், அப்பதான் படத்துக்கு ஒரு டப்பிங் பட எஃபெக்ட் இருக்கும், வசூல் கையை கடிக்காது என்றபோது "காப்பி ரெடி" ங்கற மாதிரி மெஸ்சில் சினிமா பாட்டு போட்டாங்க..

             போய் சாப்பிட்டு வந்து உட்கார்ந்தா... "எந்திரிங்கடா.. அவனவன் எப்படி அரியரை க்ளியர் பண்றதுன்னு கவலையா இருக்கானுவோ ..நீங்க என்னென்னா வெறுப்பேத்ரமாதிரி.. தின்னு  தின்னுட்டு நாள்முச்சூறும்  உக்காந்து கதையா பேசுறீங்க நீங்க" ன்னு அந்த ஹஸ்டல் பிளாக்கின்  இரண்டு  விங் நண்பர்களும் அருணின் தலைமையில் ஒன்றுகூடி எங்களை ஓட ஓட விரட்டியடிக்க...

          பின்னர்தான் தெரிந்தது...அந்த அருண்தான் ரூம் ரூமாய் போய் சொல்லி எல்லோரையும் திரட்டி வந்தான்னு.....

    மறக்கக்கூடாதென்று அதே இடத்தில் இருவரும் உட்கார்ந்து படம் எடுத்துக்கொண்டோம்.. ஹாஸ்டல் வாழ்வின் கடைசீ நாளன்று….கேமிரா க்ளிக் வேறு யாரு..? ..அருண் தான் ....

   இன்றும்….பார்க்கும்போதெல்லாம் அந்தப்புகைப்படம் முகத்தில் சிரிப்பையும் மனதில் மகிழ்ச்சியையும் கொண்டுவருகின்றது..!


                                             ~~~~~~~~~~~~*****~~~~~~~~~~~~~~~

வெகுளி தரும் வெகுமதி

1.வெகுளி தரும் வெகுமதி
     ~~~~~~~~~********~~~~~~~~~~
        இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என எல்லாக் காலங்களிலும் வெகுளித்தனம் வேதனையையே அளிக்கின்றது!

     நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் இடும் நண்பர் ஒருவருக்கு திடீரென்று ஒரு இடர்பாடு ஏற்படவே, அதையும் வெகுளியாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் அவர்.

           விளைவுஅவரது வேதனை இன்னும் அதிகமாயிற்று.

          இடம், பொருள், ஏவல் என்பனவற்றை சற்றும் கருத்தில் கொள்ளாத அவரது நண்பர்கள் பலர், அந்நண்பருக்கு வந்த இடரிலிருந்து நல்லபடியாய் வெளிவரும் ஆலோசனைகளைக் கூற முன்வராது…....கேலியானக் கருத்துக்களைக்கூறி, கேலிச்சொற்களால் குத்திக்கீறி, ரணப்படுத்தியதைப் பார்க்கையில் மனம் வேதனையடைந்தது!

         
நண்பர், சிரிக்கச் சிரிக்க செய்திகள் போடுபவர். அச்சிரிப்பு வெடிகளை ரசித்தே பழக்கமாகிவிட்டதால் ஏற்பட்ட வினை!

         நகைச்சுவையாய் பதிவிடுபவர்களுக்கும் துன்பங்கள் வரும் என்பதை உணர மறுக்கும் சிலர்..இருபாலர் நட்பில் கிண்டலும் கேளியுமாய் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடைய பலர்.. என்று இக்காலச்சூழல்  இருப்பது "இடுக்கண் களைவது"  நட்பின் பண்பு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னமும் பலர் பெறவேயில்லை என்பதையே காட்டுகின்றது. இதைப் பார்க்கும்போதுதான் மனம் இன்னும் அதிக வேதனையடைகின்றது!

         "பக்கத்திருப்பவர் துன்பம்தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி " என்றான் பாரதி அன்று!
         
       
இன்றோ..அத்துன்பத்தை உன்னிப்பாய்ப் பார்த்து, ஆராய்ந்து... பின் படமும் எடுத்துப்போட்டு சிலாகிக்கும் பண்புதான் மண்டிக்கிடகின்றது..

          மரபுகளையும் மாண்புகளையும் இழக்கத் துணிகின்றதோ மானுடம்?